காத்மாண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்றிரவு அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. பஜூரா மாவட்டத்தில் உள்ள தஹாகோட் பகுதியின் மையத்தில் 10 கிமீ ஆழத்தில் இவ்விரு நிலநடுக்கங்களும் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் நேற்றிரவு 11.58 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.9 என்கிற அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் அதிகாலை 1.30 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக நேபாளத்தின் நில அதிர்வு மையத்தின் அதிகாரி ராஜேஷ் ஷர்மா தெரிவித்திருக்கிறார்.
நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் கடுமையாக குலுங்கியதால், அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டுவெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த இரண்டு நிலநடுக்கங்களின் போது ஏற்பட்ட உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.