நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், கடந்த 27ம் தேதி பிகாம் பட்டப்படிப்புக்கான ‘தொழிற்சாலை சட்டம்’ (இன்டஸ்டிரியல் லா) என்ற பாடத்தின் வினாத்தாள் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அன்று நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு நேற்று முன்தினம் நடந்தது.
வினாத்தாள் கசிந்தது தொடர்பாக பல்கலை பதிவாளர் சாக்ரடீஸ், பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில், ‘கடந்த 26ம் தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தேர்வாணையர் வாட்ஸ்அப் எண்ணுக்கு 27ம் தேதி நடக்க இருந்த தொழிற்சாலை சட்டம் பாடத்திற்கான வினாத்தாள் அனுப்பப்பட்டதாகவும், இதன் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில், புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 316, 318, 3(5) தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகள் சட்டம் 3, 4 மற்றும் 5 (தேர்வு முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வாணையர் வாட்ஸ்அப் எண்ணுக்கு வினாத்தாள் அனுப்பிய செல்போன் எண்ணை போலீசார் சோதனை செய்தபோது, மதுரையை சேர்ந்த அறிவுச்செல்வன் என்பவரது பெயர் வந்துள்ளது. அந்த எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.