நெல்லை: நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் மாணவன் தற்கொலை சம்பவத்தை அடுத்து பள்ளி பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி பேருந்துகளுக்கு நள்ளிரவில் தீ வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி நேற்று வீரவநல்லூர் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனிடையே பள்ளி பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, தீ வைத்தவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
