நெல்லை: நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் 50க்கும் மேலான வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் டன் கணக்கில் பொதுமக்கள் பயன்டுத்தக்கூடிய குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து குப்பைகள் லாரிகள் மூலமாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நெல்லை - ராமையன்பட்டி பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்குகள் சேகரித்து வைக்கப்படுகின்றன. இந்த குப்பை கிடங்கு மாலை 4 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.
இதனால் ராமையன்பட்டி, நெல்லை மாநகர பகுதி சுற்றுவட்டார பகுதிகள் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதன் காரணமாக தச்சைநல்லூர், ராமையன்பட்டி சுற்றுவட்டார தவித்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த நெல்லை பாளையங்கோட்டை கங்கை கொண்டான் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல ஏக்கர்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருந்தபோதிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் தீ கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் தீ வேகமாக அருகில் உள்ள குப்பைகளில் பரவி அந்த இடமே புகை மண்டலமாக காணப்பட்டது. தகவலறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டார்.
