நெல்லை : நெல்லை டவுனில் பரந்து விரிந்து கடல்போல் நயினார்குளம் காணப்படுகிறது. இக்குளத்துக்கு நெல்லை கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. நயினார்குளத்தின் தண்ணீர் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல்போல் காணப்படுவது கண்கொள்ளா காட்சியாகும்.
நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நயினார்குளத்தை சுற்றிலும் கரைகளை சீரமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களும், மாலை நேரத்தில் பொதுமக்கள் அமர்ந்து குளத்தின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. குளத்தின் தெற்குபகுதி கரையில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் குளத்தை சுற்றிலும் மறைவான இடத்திலும், குளத்தின் பாதுகாப்பு சுவர் பகுதியிலும் பகல், இரவு நேரங்களில் குடிமகன்கள் மதுக்குடிக்கும் பாராக மாற்றி வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் டம்ளர்கள், மெழுகு பூசிய கப்புகள், மதுபாட்டில்கள் நிறைந்து காணப்படுகிறது. பிளாஸ்டிக் டம்ளர்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நயினார்குளம் கரையில் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து முகம் சுளிக்கின்றனர்.
மேலும் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு பொருட்களும் வீசப்படுவதால் இதனை தெருவில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள் தின்றுவிடுவதால் கால்நடைகள் உயிர்பலியாகின்றன. அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள், மழைநீர் வடிகால்களில் தேங்குவதால் தண்ணீர் செல்வது தடை ஏற்பட்டு, சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும், தவிர்க்கவும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் நயினார்குளம் கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.