பேட்டை: நெல்லை அருகே நேற்று நடத்தை சந்தேகத்தால் குழந்தைகள் கண் முன் காதல் மனைவியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி, குன்னத்துரை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு சங்கரம்மாள் (எ) அபிராமி (28), பிரசாந்த் (25), பிரதீப் (23) என 3 பிள்ளைகள். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து கரூரில் வேறு ஒரு பெண்ணை மணமுடித்து கடந்த 20 ஆண்டுகளாக அங்கேயே வாழ துவங்கினார் தர்மராஜ். இதையடுத்து சகுந்தலா, நெல்லை மாவட்டம், சுத்தமல்லி அடுத்த சத்யா நகர் பகுதியில் வசிக்கும் தனது தாயார் லட்சுமியுடன் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
இதனிடையே சங்கரம்மாளுக்கு, கல்லுப்பட்டி அடுத்த குன்னத்தூரை சேர்ந்த தாய்மாமன் மகனும், மதுரையில் தனியார் காஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தவருமான பிரபுராஜா (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. சக்திகா (9), ஜெனித் ராஜ் (7) என்ற மகள், மகன் உள்ளனர். பிரபு ராஜா, அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் உறவினர் ஒருவருடன் சங்கரம்மாளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் விரக்தியில், சங்கரம்மாள், தனது குழந்தைகளுடன் நெல்லை சுத்தமல்லி சத்யா நகரில் உள்ள பாட்டி லட்சுமி வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வந்து குடியேறினார். குழந்தைகளையும் அருகேயுள்ள பள்ளியில் சேர்த்தார். நெல்லை டவுனில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலைக்கும் சேர்ந்தார். மேலும் பாட்டியின் வீட்டருகே மற்றொரு வாடகை வீட்டில் குடியேறி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் மதுரையில் இருந்து நெல்லை வந்த பிரபுராஜா, மனைவி வீட்டில் இல்லாததால் நகைக்கடைக்கு சென்றார். இதையறிந்த சங்கரம்மாள், கடையில் பதுங்கி கொண்டார். இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பிரபுராஜா, மனைவியின் வருகைக்காக காத்திருந்தார். இந்நிலையில் நகைக்கடை உரிமையாளர், ‘உனது பிரச்னையை முடித்து வேலைக்கு வா’ என்று சங்கரம்மாளை, மதியம் வீட்டிற்கு அனுப்பினார். இதற்கிடையில், ‘மனைவியை அனுசரித்து செல்’ என்று பிரபு ராஜாவுக்கு லட்சுமி அறிவுரை கூறி கொண்டிருந்த நேரத்தில் சங்கரம்மாள் சென்றார்.
இருவருக்கும் அறிவுரை கூறியதோடு உணவு பரிமாறி விட்டு அருகேயுள்ள தனது வீட்டுக்கு லட்சுமி சென்றார். அப்போது, பள்ளிக்கு சென்றிருந்த குழந்தைகளும் வீடு திரும்பினர். அவர்களை கொஞ்சியபடி சாப்பிட்டு கொண்டிருந்த பிரபு ராஜா, திடீரென வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்கரம்மாள் பரிதாபமாக இறந்தார். அச்சத்தில் உறைந்த குழந்தைகள் அலறியபடியே பாட்டியின் வீட்டிற்கு சென்று நடந்த விவரத்தை கூறினர்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் நடத்தை சந்தேகத்தில் காதல் மனைவியை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.