*குறி கேட்டு திரும்பிச் சென்ற போது சம்பவம்
நெல்லை : நெல்லை அருகே குறி கேட்க தாயும், மகனும் பைக்கில் சென்று விட்டு வீடு திரும்பிய போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதி இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி, கீழ நவலடிவிளையைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சந்தனமாரி (50).
இவரது மகன்கள் இசக்கிராஜா என்ற குட்டி (28), சதிஷ் (21). நேற்று காலை இசக்கிராஜா என்ற குட்டி தனது தாயை பைக்கில் அழைத்துக் கொண்டு நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றார்.
அங்கு அவர்கள் தங்களது குடும்ப கஷ்டம் நீங்கவும், தங்களது பல்வேறு தேவைகள் குறித்தும் அந்த கோயிலில் குறிகேட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கிருந்து இசக்கிராஜா தனது தாயுடன் பைக்கில் வீட்டிற்குத் திரும்பினர்.
நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சென்றபோது புவியியல் ஆராய்ச்சி மையம் அருகே ஆரோக்கியநாதபுரத்தில் எதிர்பாராத விதமாக சாலையோர சோலார் மின்கம்பத்தில் பைக் பயங்கரமாக மோதியது. இதில் சந்தனமாரி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இசக்கிராஜா என்ற குட்டியும் தலையில் பலத்த காயமடைந்து மயங்கினார்.
உடனடியாக அந்த சாலைவழியாக சென்றவர்கள் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் இசக்கிராஜாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற சிவந்திப்பட்டி இன்ஸ்பெக்டர் சுதா சந்தனமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தார்.
இதற்கிடையே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இசக்கிராஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தாய், மகனின் உடலை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.குறிகேட்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய், மகன் ஆகிய 2 பேரும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.