சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திமுக கையெழுத்து இயக்கத்தில் 10 நாட்களில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், கடந்த 21ம் தேதி சென்னை செனாய் நகரில் நடந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘நீட் விலக்கு நம் இலக்கு’ எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, தனது கையெழுத்தையும் பதிவு செய்தார். இதுபோல, சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. ஆன்லைன் பதிவும் நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டு வருகிறனர். ஆன்லைன் பதிவிலும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆன்லைன் பக்கத்தில் பெயர், தொலைபேசி எண், மாவட்டம், தொகுதி மற்றும் டிஜிட்டல் கையெழுத்து போடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு 10 நாட்களில் (நேற்று பிற்பகல் 3.40 மணி அளவில்) ஆன்லைனில் மட்டும் 2 லட்சத்து 11 ஆயிரத்து 906 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல், கார்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் என இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்து பதிவு செய்துள்ளனர். இதுதவிர எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் தங்கள் பதிவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதேபோல திமுக சட்டத்துறை இணை செயலாளரும், சென்னை எழும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான இ.பரந்தாமன் தனது பதிவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் தனது இணையதளம் பக்கத்தில், “எழும்பூர் தொகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க எனது எழும்பூர் தொகுதியை சார்ந்த பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் நீட்தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் இணைந்து கையொப்பமிட்டு உங்கள் ஆதரவை தரும்படி உங்கள் சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
* 50 நாளில் 50 லட்சம்
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருவதால் நிர்ணயித்த 50 நாட்களில் 50 லட்சம் இலக்கை தாண்டி கையெழுத்து பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடக்கும் திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஒப்படைக்கப்படும். பின்னர் அறிவாலயம் வழியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.