சென்னை: நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசின் சூழ்ச்சி அம்பலமாகியுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டேஜ் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் நீட் தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, நீட் தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும் என்பது தான் மாணவர்கள்-பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது.
தனியார் பயிற்சி மையங்களையும் தனியார் மருத்துவக்கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடு தான் நீட் தேர்வு என்று திமுக ஆரம்பம் முதல் கூறி வந்தது, இன்றைக்கு உண்மையாகியுள்ளது. மருத்துவராகும் கனவுடன் புறப்படும் நம் ஏழை எளிய பிள்ளைகளை மரணக்குழியில் தள்ளும் நீட் அநீதிக்கு, ஒன்றிய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.