Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: முக்கிய குற்றவாளி உள்பட மேலும் 2 பேர் அதிரடி கைது

பாட்னா: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய குற்றவாளி உள்பட மேலும் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது. தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்தது தெரிந்தது.

இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டன. அதன்பேரில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்து வருகிறது. இந்த வழக்குகளில் ஏற்கனவே பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்நிலையில் முக்கிய குற்றவாளி உள்பட மேலும் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஜார்கண்டின் ஹசாரிபாக் நகரில் இருந்து நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான இன்ஜினியர் பங்கஜ் குமார் (எ) ஆதித்யாவை கைது செய்துள்ளோம். ஜார்கண்டின் பொகாரோ நகரை சேர்ந்த குமார், பாட்னாவில் கைது செய்யப்பட்டார். அதே போல் வினாத்தாள்களை திருடி கசிய விடுவதில் குமாருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங்கை ஹசாரிபாக்கில் கைது செய்தோம்’ என்றார்.