சென்னை: தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் தேர்தல் பணிக்கு அழைக்க கூடாது என கொள்கை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சசிகலா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், தேர்தல் பணியில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காமல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை தேர்தல் பணியில் அமர்த்தக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
சட்டமன்ற, நாடளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் போது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது, நள்ளிரவு வரை பணியில் இருப்பதால் போதிய பாதுகாப்பு இல்லை. தேர்தல் பணிக்கு செல்லும் பெண்களுக்கு போக்குவரத்து, உணவு, கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை என்பது அவரது குற்றச்சாட்டாகும். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விதிகளை வகுத்துள்ளது.
எந்தெந்த பிரிவினருக்கு பணியில் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற பிரிவுகளையும் வகுத்துள்ளது. அப்படி இருந்தும் தேர்தல் பணிக்கு செல்வோருக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காவிட்டால் அவர்களை பணிக்கு அழைக்க கூடாது என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற வழக்குகளை அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர். அதேசமயம், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுப்பது அதிகாரிகளின் கடமை என்று வலியுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.