சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன், வானதி சீனிவாசன் ஆகியோர் விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக எம்.ஜி.ஆரால், தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், வரலாற்று சிறப்புமிக்க இயக்கமாக, அதிமுகவை கட்டிக் காத்து வந்தனர். இன்றைய சூழ்நிலையில், தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ? அதுபோல் நடப்பது தான் நல்லது. அதிமுக தொண்டர்கள் அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று, தொண்டர்கள் நினைக்கின்றனர். இதற்கு மேல் நான் டெல்லியில் இருந்து வரும் போது உங்களிடம் பேசுகிறேன் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டம் டெல்லியில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. எனவே கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்கிறேன். இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.