Thursday, June 19, 2025
Home செய்திகள் தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

by Karthik Yash

மதுரை: தேசிய முதியோர் மையங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த் ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் வயதானவர்களை பேருந்து நிலையங்கள், சாலை ஓரங்கள் போன்ற இடங்களில் அவர்களது பிள்ளைகளும், உறவினர்களும் தனியே விட்டுச் செல்லும் நிலை அதிகரித்து வருகிறது. சுகாதார குறைபாடுகளால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு முதியோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேசிய முதியோர் மையங்களை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால், இந்த மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் முறையாக அமைக்கப்படவில்லை. எனவே, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர், ‘‘வயதானவர்களை குறி வைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. முதியோருக்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும், அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படுவதில்லை. அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை’’ என்றனர். ஒன்றிய அரசு தரப்பில், “முதியோர் மையங்களை அமைப்பதற்கான நிதியைத்தான் ஒன்றிய அரசு வழங்கும். இல்லம் அமைப்பது மாநில அரசின் பணி’’ என கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது ஒன்றிய அரசின் பணி தானே’’ என கேள்வி எழுப்பினர். பின்னர் மூத்த குடிமக்களை பாதுகாக்க அவர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி அவர்களை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே, இந்த வழக்கில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் சமூக நலத்துறையின் முதன்மைச் செயலர்களை இந்த நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. தேசிய முதியோர் மையங்களை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi