சென்னை: தேசிய திருநங்கையர் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஏப்ரல் 15-தேசிய திருநங்கையர் நாள்! புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையை காக்கும் பெயர் தந்து, நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்.
கட்டணமில்லா பேருந்து பயணம், திருநர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும், புதுமைப்பெண் திட்டம் திருநங்கையருக்கும் விரிவாக்கம், ஊர்க்காவல் படையில் திருநர்கள் என அதனை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்கிறது நம் திராவிட மாடல் அரசு. திருநர்களின் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்களின் மாண்பை உறுதிசெய்வோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.