புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு தலைவராக அலோக் ஜோஷியை அரசு நியமித்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவி வருகின்றது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவை ஒன்றிய அரசு புதுப்பித்துள்ளது. இதன் தலைவராக இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனமான ரா பிரிவின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவானது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு உள்ளீடுகளை வழங்கும் ஆலோசனை அமைப்பாகும். மேலும் இதன் புதிய உறுப்பினர்களாக மேற்கு விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பிஎம் சின்ஹா, முன்னாள் தெற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏகே சிங் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் மான்டி கன்னா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் தூதர் வெங்கடேஷ் வர்மா மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் வர்மா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.