Sunday, June 22, 2025
Home செய்திகள் நந்திவரம்-கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

நந்திவரம்-கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரம் உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

by Ranjith

சென்னை: தமிழ்நாட்டில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி, மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை மற்றும் பழனி ஆகியவை சிறப்பு நிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம் ஆகியவை தேர்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட 11 நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை: சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்த அதன் ஆண்டு வருவாய் ரூ.15 கோடிக்கு மேலாகவும், தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த ரூ.15 கோடி வரையிலும், முதல்நிலை நகராட்சியாக நிலை உயர்த்த ரூ.9 கோடி வரையிலும், இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த ரூ.6 கோடிக்கு மிகாமலும் வருவாய் அளவு இருக்க வேண்டும்.

இந்நிலையில், திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழநி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளை தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மாநில அரசு நிர்ணயித்துள்ள வருவாய் அளவுக்கு உட்பட்டு அந்த நகராட்சிகள் இருப்பதால் அவை தரம் உயர்த்தப்படுகின்றன.

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழநி ஆகிய மூன்று தேர்வு நிலை நகராட்சிகள் சிறப்பு நிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம் ஆகிய முதல்நிலை நகராட்சிகள் தேர்வு நிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள் முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால், மேம்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இந்நகரங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi