நாமக்கல்: பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையத்தில் டிராக்டருக்கு தீ வைத்த சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெல்ல ஆலை கொட்டகையில் வேலை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களின் கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றுக்கு தீ வைக்கப்பட்டன.
குளத்தில் விஷத்தை கலந்தது என அடுத்தடுத்த வன்முறை சம்பவங்கள் நடந்தன. வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையை உடைத்த மர்மநபர்கள் தொழிலாளர்கள் மீது மண்எண்ணெய் பாட்டில்களை வீசி தீ வைத்தனர். இதில் ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான போலீசார் இரவு, பகலாக துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்நிலையில், டிராக்டருக்கு தீ வைத்த சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக நடந்த தீ வைப்பு சம்பவத்தில் தொடர்பா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்ட 10 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெல்ல உற்பத்தி ஆலை கொட்டகைகள், புலம்பெயர் தொழிலாளர் மீதான தீ வைப்பு சம்பவத்தில் தொடர்பா? என விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவத்திலும் தொடர்பா? எனவும் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.