Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து சாலை மறியல்

ராசிபுரம், ஜன.22: ராசிபுரம் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து, நாமக்கல் சாலையில் நேற்று காலை பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் காந்திநகர் பகுதியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த தனி நபர், பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பாதையை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை ராசிபுரம்- நாமக்கல் சாலையில் திரண்டு, திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிப்புக்குள்ளாகினர். இதுகுறித்த தகவலறிந்த பேளுக்குறிச்சி மற்றும் ராசிபுரம் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 9 மணியில் இருந்து சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திடீர் மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.