Friday, July 18, 2025
Home செய்திகள் இங்க என்ன சொல்லுது? என்னுடைய மனசாட்சி தலைவர்.. தலைவர்னு சொல்லுது…

இங்க என்ன சொல்லுது? என்னுடைய மனசாட்சி தலைவர்.. தலைவர்னு சொல்லுது…

by Arun Kumar

திண்டிவனம்: நான் உயிருடன் இருக்கும் வரை அன்புமணி செயல்தலைவர்தான். என்னுடைய மனசாட்சி தலைவர்.. தலைவர்னு சொல்லுது… என்று ராமதாஸ் மீண்டும் தெரிவித்து உள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே நடந்து வரும் மோதலின் தொடர்ச்சியாக இதுவரை 80 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். நேற்று முன்தினம் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளுக்கு மாநில இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கினார். ராமதாஸ் பதவி வழங்கிய அடுத்த சில மணி நேரத்தில் அருளின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை அன்புமணி பறித்தார்.

அருளுக்கு பதிலாக சரவணன் என்பவரை மாநகர மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ளார். இப்படி தினம் தினம் தந்தை மகன் கட்சி நிர்வாகிகளை பந்தாடி வருவது தொண்டர்களிடேயே குழப்பத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி போஸ்டரை யாரோ விஷமிகள் கிழித்திருக்கிறார்கள். அதை கிழிக்கக் கூடாது, அது நல்ல பண்பாடு இல்லை. யார் படத்தையும் கிழிக்கக் கூடாது.

கட்சியில் யாரையும் நீக்கும், சேர்க்கும் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது என அருள் எம்எல்ஏ சரியாக, மிகச்சரியாக சொல்லியிருக்கிறார். அன்புமணி சிக்கியுள்ள மாயை யார்? என்று தெரியாது. அவர் ஆயிரத்து ஒரு கோயிலுக்கு போய் பூஜை பண்ணி, விபூதியோ, குங்குமமோ இட்டு, அதன்பிறகு ஒரு தெளிவு ஏற்பட வேண்டும். என்னால் போக முடியாது. நான் தான் தலைவர் ஆகிவிட்டேனே, பிறகென்ன, ஆனால் தேர்தல் சம்பந்தமான யுக்திகள், எந்த அணியில் சேர்வது, யாரோடு கூட்டு என்றெல்லாம் முடிவு செய்வது பொதுக்குழு. எனவே தேவைப்படும் நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி, உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுப்போம்.

அன்புமணிக்கு நல்ல பொறுப்பு கொடுத்துள்ளோம், எல்லா பொறுப்புகளிலும் சிறந்தது செயல்தலைவர். ஒரு கட்சியினுடைய வளர்ச்சிக்கு செயல்தலைவர் மிகமிக முக்கியம். அதனால்தான் அந்த பொறுப்பை கொடுத்துள்ளோம். அவர் அதை ஏற்கமாட்டேன் என்று கூறினார். அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டால், பிரச்னையே தீர்ந்து போயிடுச்சு. ஆனால் தலைவர் பொறுப்புத்தான் வேண்டும் என்கிறார். தலைவர் பொறுப்பைதான் இவ்ளோ நாள் வைத்திருந்தார். மூன்று வருஷத்துக்கு மேல் வைத்திருந்தார்.

இப்போ எனக்கு இந்த வயசுல பதவி வேண்டும் என்று, எனது மனசு சொல்லிச்சு. இந்த மனசு கொஞ்ச நாளைக்கு நீ உன் மூச்சு இருக்கும் வரை தலைவராக இருந்து போயேன் என்று கூறுகிறது. என்னமோ தெரியல என் மனது என் மூச்சு காற்று இருக்கிற வரைக்கும், நான் சொல்றத கேளு, நீ தான் தலைவர் என்று என் மனசாட்சி கூறுகிறது. மனசாட்சி சொல்கிறதே சரி என்று நான் கேட்டுக்கொண்டேன். மூச்சு உள்ளவரைக்கும் அதில் இருப்பேன். அந்த பதவியை நான் ஏற்க கூடாதா? சொல்லுங்கள். அந்த பதவியில் என் மூச்சு உள்ளவரை மட்டும்தான் இருக்க முடியும்.

அதன்பின் அவர்தான் தலைவர். அந்த பொறுப்புக்கு வரப்போகிறவர் யார்? சொல்லுங்கள். வேறு யாரும் வரப்போவதில்லை. ஆனால், இந்த பொறுப்புக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். அன்புமணியை தவிர அடுத்த கட்ட தலைவர்களையும் உருவாக்கியிருக்கிறோம். இப்போது ஓய்வறியா உழைப்பாளி, தியாகச்செம்மல் ஜி.கே.மணி, அவரது உழைப்பை, அவரது உழைப்புக்கு ஈடாக யாரையாவது சொல்ல முடியுமா, எங்கள் கட்சியில் கேட்கவில்லை. தமிழ்நாட்டிலேயே கேட்கிறேன். அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு நாள் முன்னாடி அவரை சென்னைக்கு சென்று பார்த்துவிட்டு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

* மேலும் ஒரு பாமக எம்எல்ஏ பதவி பறிப்பு புதிய நிர்வாகிகள் நியமனம்

பாமக மாநில துணைத் தலைவராக சேலம் ஓமலூரைச் சேர்ந்த கே.சி.ஆறுமுகம் என்பவரை புதிதாக ராமதாஸ் நியமித்துள்ளார். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்எல்ஏ வெங்கடேஸ்வரனை நீக்கிய ராமதாஸ் அப்பதவிக்கு சரவணன் என்பவரை அறிவித்துள்ளார். மேலும் சேலம் மாநகர் மாவட்டத் தலைவராக கோவிந்தன் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய 3 ெதாகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாநில இளைஞர் சங்க செயலாளராக விஷ்வா வினாயகம் என்பவரை தொடர்ந்து கடலூர் மேற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளையும் கூண்டோடு மாற்றி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். அன்புமணி ஏற்கனவே பாமக மாநில துணைத் தலைவராக வெற்றி திருஞானத்தையும், மாநில இளைஞர் சங்க செயலாளராக சமட்டிகுப்பம் இரா.ஆறுமுகத்தையும் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* கலைஞர் பாணியில்….

ராமதாஸ் கூறுகையில், ‘பல்வேறு காலக் கட்டங்களில், பல்வேறு சோதனைகளை எல்லாம் தாங்கி, ஏச்சு, பேச்சு, விமர்சனங்கள் மற்ற கட்சிகளின் ஏளனங்கள், இதை எல்லாம் தாங்கி, அவர்களுக்கு பதில் சொல்லி நாகரிகமாக, நளினமாக இந்த இரண்டு வார்த்தையும் கலைஞரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். அதே மாதிரிதான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனது நண்பர் கலைஞர் கருணாநிதி பாணியில் பாமகவின் தலைவராக இறுதிமூச்சு வரை நான்தான் செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக செயல்பட வேண்டும். மறைந்த கலைஞர் 94 வயது வரை சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கட்சியின் தலைவராகவும் ஆட்சியின் முதன்மையாளராகவும் இருந்தார்.

இப்போது முதல்வராக இருக்கிற ஸ்டாலின் முணுமுணுப்போ எந்த செய்தியோ சொல்லவில்லை. ஸ்டாலினை பார்த்து அன்புமணி கற்றுகொள்ள வேண்டும்’ என்றார். அன்புமணி, பாமகவில் நிலவும் பிரச்னைக்கு திமுக தான் காரணம் என சமீபத்தில் கூறிய கருத்துக்கு இது அப்பட்டமான பொய் என பதிலடி தந்த ராமதாஸ், தற்போது தந்தை- மகனுக்கான குடும்ப, அரசியல் உறவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென அன்புமணிக்கு மீண்டும் பாடம் புகட்டி இருப்பதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* யாமறியேன் பராபரமே

ஜி.கே.மணி மகன் மற்றும் முகுந்தன் ஆகியோரை இளைஞர் அணி தலைவராக அன்புமணி ஏற்க மறுப்பது ஏன்? என்ற கேள்விக்கு ‘யாமறியேன் பராபரமே… யாமறியேன் பராபரமே…. யாமறியேன் பராபரமே’ என்றார். இளைஞரணி தலைவர் எப்போது போடுவீர்கள்? என்று கேட்டதற்கு ‘போடுவோம். பொதுக்குழு எப்போது கூடுமோ? அப்போது கூட அறிவிப்போம்’ என்று ராமதாஸ் தெரிவித்தார்.

* வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது

கீழடி ஆய்வுகளை ஒன்றிய அரசு ஏற்கவில்லை, இதுபோன்று தமிழ் கலாச்சாரங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதை பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராமதாஸ், ‘அண்ணா தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது என்று சொன்னார். அவர் திராவிட நலன்கள் குறித்து தொடர்ந்து எழுதுவார். இப்போது எனக்கும் அதை படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் நேரமில்லை. மிக நன்றாக எழுதுவார்’ என்றார்.

* திருமண நாளுக்கு அன்புமணி வராதது வருத்தம்தான்

உங்களுடைய மணவிழாவுக்கு அன்புமணி வரவில்லை. அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘உங்களுடைய மணவிழாவுக்கு, உங்கள் பிள்ளைகள் வரவில்லை என்றால் எப்படி இருக்குமோ? அப்படித்தான் எனக்கும் இருக்கும்’ என்று ராமதாஸ் தெரிவித்தார்.

பெரியார், அண்ணாவை அவமதிப்பதா

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினார்கள். எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்கள். உங்களுக்கு அழைப்பு வந்ததா? பெரியார், அண்ணாவை அவமதிக்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராமதாஸ், ‘எனக்கு அழைப்பு வரவில்லை. பெரியார், அண்ணாவை அவமதித்தது வருந்தக்கூடியது. தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டு செய்யக்கூடிய, அவர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற, எந்த தலைவராக இருந்தாலும் கொச்சைப்படுத்துவது கூடாது. இதை அரசியல் கட்சிகள் நடத்தும் எல்லோருக்கும் என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். எந்த தலைவர்களையும் கொச்சைப் படுத்தக்கூடாது. கொள்கையில் வேறுபாடுகள், மாற்றங்கள் இருக்கலாம், அவர்கள் சொன்ன கருத்துக்கள், இவர்களுக்கு ஒவ்வாமையாக இருக்கலாம். சொல்லலாமே தவிர, அவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது’ என்றார்.

* ‘அன்புமணி பக்கம் சென்றவர்கள் தவறை உணர்ந்து திரும்புகிறார்கள்’

பாமக நிறுவனர் ராமதாஸ் ேநற்று அளித்த பேட்டி: பதவி சுகத்தை நான் விரும்பியிருந்தால் மத்தியிலே எந்த பொறுப்பும் கிடைத்திருக்கும். அந்த வகையில் 4, 5 பிரதமரோடு நெருங்கி பழகியவன் நான். இப்போது இருக்கிற பிரதமர் மோடியும் என்னோடு நட்பாக இருக்கிறார். அவரது அன்பை சேலத்திலே எப்படி வெளிக்காட்டினார் என்பது உங்களுக்கு தெரியும். கட்டிப்பிடித்து இறுக்கமாக வெளிக்காட்டினார். பதவி சுகம், அரச கட்டில் அது நான் போகமாட்டேன். அப்படி ஒரு சத்தியம் செய்திருக்கிறேன். பாமக தலைவர் பதவி வந்து, தனிமனிதனாக, சுயம்மாக நானே உருவாக்கிய பதவி. இந்த கட்சி எவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கிய கட்சி. எவ்ளோ ஒன்றிய அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உருவாக்கிய கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் பின்னால் வந்தவர்கள் ஒரு கூட்டம், அன்புமணியை பின்பற்றி போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நிலை என்ன? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர்களுடைய நிலை, மனசு, எண்ணம் என்ன சொல்லுச்சோ, அப்படி போனார்கள். பின்னர் அவர்களது மனசாட்சி அவரிடம் போனது தப்பு என்று சொல்லி மீண்டும் இங்கு வருகிறார்கள் என்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முருகரை தமிழ்கடவுள் என்று கூறினால், அப்போது பார்வதியும், சிவனும் தமிழ் கடவுள்தானே என கேட்கிறாரே என்று கேள்விக்கு இந்த சர்ச்சைக்குள், பிரச்னைக்குள் நான் வர விரும்பவில்லை என்று ராமதாஸ் தெரிவித்தார்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi