Tuesday, June 24, 2025
Home செய்திகள்Banner News பதவியில் இருந்து மாற்றிவிட்டதாக யாருக்கும் கவலை வேண்டாம்; என் கடிதம்தான் செல்லும்: அன்புமணி பரபரப்பு பேச்சு

பதவியில் இருந்து மாற்றிவிட்டதாக யாருக்கும் கவலை வேண்டாம்; என் கடிதம்தான் செல்லும்: அன்புமணி பரபரப்பு பேச்சு

by Neethimaan

சென்னை: பதவியில் இருந்து மாற்றிவிட்டதாக யாருக்கும் கவலை வேண்டாம், என் கடிதம்தான் செல்லும் என அன்புமணி தெரிவித்துள்ளார். அன்புமணி மீது ராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு வைத்த நிலையில் சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 22 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பாமகவினருக்கு கியூஆர் கோடு உடன் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்; கடந்த முறை உறுப்பினர் அட்டையில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்தபோது பீகாரில் ஒலித்தது.

பாமகவுக்கு உறுப்பினர்களை உண்மையான முறையில் சேர்க்க வேண்டும். கட்சியினர் பாமகவுக்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம். மொபைல் செயலி ஒன்று தயார் செய்துள்ளேன். கிளை செயலாளர்கள் கூட என்னிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவோ, தகவல்களை அனுப்பவோ செயலியை பயன்படுத்தலாம். கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தற்காலிகமானவை; அதையெல்லாம் சரி செய்துவிடுவோம். திலகபாமாவை நீக்கியதாக அறிவிப்பு வெளியான நிலையில் அவர் தொடருவார் என அறிக்கை வெளியிட்டேன். பாமக பொருளாளர் திலகபாமாவை நானோ, வேறு யாரோ நீக்க முடியாது; அவரை பாமக பொதுக்குழு தான் நியமித்தது.

நான் எத்தனையோ பதவிகளை பார்த்துவிட்டேன். என்னை தலைவனாக எண்ணவில்லை; தலைமை தொண்டனாகவே இருக்கிறேன். மனதில் நிறைய உள்ளன; ஆனால் பேச முடியவில்லை. நேற்று தான் எனக்கு விடுதலை கிடைத்தது; இனி நாம் வேகமாக செல்லலாம். எந்தத் தடை வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறுவோம். பாமகவை அடுத்தகட்டத்துக்கு நாம் கொண்டு வருவோம். நமக்கு இருந்த தடைகள் நேற்று முதல் அகன்றுவிட்டன. என் வாழ்க்கையில் நான் பல சோதனைகளை சந்தித்துள்ளேன். எனது அம்மா மீது சிறு துரும்பு கூட பட விடமாட்டேன். இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்தவர் எனது அம்மாதான். தன் மீது அபாண்டமான பழிகள் சுமத்தப்பட்டது.

பதவியில் இருந்து மாற்றிவிட்டார்கள் என யாரும் கவலைப்பட வேண்டாம்; அடுத்த 10வது நிமிடம் நீங்கள் தொடர்வீர்கள் என உங்களுக்கு கடிதம் வரும். ஜாதிவாரி கணக்கெடுப்பு வரும்போது அதற்கான பொறுப்புகள் கட்சியினருக்கு வழங்கப்படும். நீங்கள் எனக்கு அடிபணிந்தவர்கள் அல்ல; எனக்கு சக தோழர்கள். என்னிடம் எத்தனையோ திட்டங்கள் உள்ளன; அதனை செயல்படுத்தும் சுதந்திரமும் உள்ளது. என் கடிதம்தான் செல்லும் என்று கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi