Thursday, May 22, 2025
Home செய்திகள்Showinpage முதுகுளத்தூர், கமுதி பகுதியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை: வெப்பம் குறைந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

முதுகுளத்தூர், கமுதி பகுதியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை: வெப்பம் குறைந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

by MuthuKumar

ராமநாதபுரம்: முதுகுளத்தூர், கமுதி பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த மழையால், வெயிலின் வெக்கை குறைந்து, பூமி குளிர்ந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், ஒரு வீட்டின் முன்பு மின்கம்பம் மற்றும் புறவழிச்சாலையில் போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்து சேதமடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அபிராமம், பெருநாழி, செங்கப்படை, புதுக்கோட்டை, கோவிலாங்குளம், பசும்பொன், கருங்குளம், உலகநடை, ராமசாமிப்பட்டி, கிளாமரம், கீழராமநதி உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை 2 மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதேபோல, முதுகுளத்தூர், சிறுதலை, வாத்தியனேந்தல், பனையடினேந்தல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய கனமழை 5 மணி வரை வெளுத்து வாங்கியது. அப்போது பலத்த காற்று வீசியதால், முதுகுளத்தூர்-கமுதி புறவழிச்சாலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்து சேதமடைந்தன.

இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சேதமடைந்த எச்சரிக்கை கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல, சிறுதலை கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வீட்டின் முன்பு இருந்த மின்கம்பம் சாய்ந்து வீட்டின் மீது விழந்தது, அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் மின்விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள், மின்விநியோகத்தை நிறுத்தி, மின்கம்பத்தை சீரமைத்தனர். முதுகுளத்தூர், கமுதியில் முக்கிய தெருக்களில், மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கடந்த சில நாட்களாக வெயிலின் காரணமாக கடுமையான வெப்ப அலை வீசிய நிலையில், நேற்று பெய்த கனமழையால் பூமி குளிர்ந்தது. வயல்கள், நீர்நிலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi