Saturday, May 17, 2025
Home செய்திகள்Showinpage முசிறி அருகே வீட்டு வாசலில் தூங்கிய வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: போலீசார் விசாரணை

முசிறி அருகே வீட்டு வாசலில் தூங்கிய வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: போலீசார் விசாரணை

by MuthuKumar

தா.பேட்டை: முசிறி அருகே வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத்(26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. சென்னையில் மகள் படித்து வருகிறார். கோபிநாத் டிப்ளமோ படித்துள்ளார்.

இவர்களுக்கு சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா, அம்பாயிபாளையத்தில் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் பாலசுப்பிரமணியன் இறந்து விட்டதால் செல்வியும், கோபிநாத்தும் தோட்டத்தில் உள்ள கூரை வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்தனர்.

இந்நிலையில் வேலம்பட்டி வயலில் உள்ள வீட்டு வாசலில் நேற்றிரவு கோபிநாத் கட்டிலில் படுத்து தூங்கினார். நள்ளிரவு தாய் செல்வி கழிவறைக்கு வெளியே வந்தபோது கட்டிலில் கோபிநாத் எரிந்தவாறு இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கோபிநாத் கருகி பலியானார்.

தகவலறிந்து வந்த முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், எஸ்ஐ முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கோபிநாத் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில், தூங்கி கொண்டிருந்த கோபிநாத் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் திருச்சியில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து பெட்ரோல் ஊற்றி கோபிநாத்தை எரித்து கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi