சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சி இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் ஆகிய துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களான உதவிபொறியாளர் / இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டம்), வரைவாளர், பொதுப்பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர், நகரமைப்பு ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய 2569 பணியிடங்களை நிரப்பிட 02.02.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வாளர்களுக்கு சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் 29.06.2024, 30.06.2024 மற்றும் 06.07.2024 ஆகிய தேதிகளில் எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டது. இத்தேர்வில் தேர்வு பெற்ற தேர்வாளர்களுக்கு அக்டோபர் 2024 ல் தேர்வுக் குழுவால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, பெறப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 24.02.2025 அன்று வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தரவரிசை பட்டியலின்படி, கலந்தாய்வு நடத்தி துறைகள் வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் நேரடித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://tnmaws.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.