டெல்லி: ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டிவரும் முதலமைச்சர் நிதீஷ்குமார் இன்று மும்பையில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை சந்தித்து பேசினார். மும்பையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் நிதிஷ் குமாருடன் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்ரீ யாதவும் பங்கேற்றார். இந்த சந்திப்பின் போது 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவை எப்படி தோற்கடிப்பது குறித்து விரிவாக பேசியதாக தெரிகிறது.
உத்தவ் தாக்கரே, சரத்பவார் ஆகியோருடனான சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த நிதீஷ்குமார் மத்தியில் இருப்பவர்கள் நாட்டுக்காக உழைப்பதில்லை என்றும் அணைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேரவேண்டும் என்றும் வலியுறுத்தினார். நிதிஷ்குமாருடன் இணைந்து பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நாட்டின் ஜனநாயகத்தை காக்க ஒன்றாக செயலாற்றுவது கட்டாயம் என்றார். எதிர்க்கட்சிகள் ஒன்றுப்பட்டு செயல்பட்டால் நாட்டுக்கு தேவையான மாற்று வழிக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே 2024 மக்களவை தேர்தலை முன்வைத்து பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி வரும் நிதிஷ் குமார் ஏற்கனவே ராகுல் காந்தி மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோரை டெல்லியில் சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக செவ்வாய் அன்று ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக்கையும் நேற்று ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனையும் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று சரத் பவார், உத்தவ் தாக்ரேவை, நிதிஷ்குமார், தேஜஸ்ஸ்ரீ யாதவ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.