முல்லைப் பெரியாறு அணையில் அணைகள் பாதுகாப்பு ஆணைய இயக்குநர், கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் தலைமையில் தமிழக – கேரள அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். முல்லை பெரியாறு அணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழு அமைத்தது. அதனுடைய துணை குழு தற்போது ஆய்வு நடத்தி வருகிறது. குமுளி தேக்கடியில் இருந்து படகு மூலமாக முல்லை பெரியாறு அணைக்கு சென்று மெயின் அணை, பேபி அணை, கேரளா பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் ஸட்டர்கள் குறித்தும் ஆய்வு நடத்துகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் மழை பெய்து 142 அடிக்கு மேல் அணையின் நீர்மட்டம் உயரும் போது ஸட்டர்கள் திறக்கப்பட்டு கேரள பகுதிகளில் உபரிநீர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதனால் ஸட்டர்கள் முறையாக இயங்குகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதேபோல் முல்லை பெரியாறு அணையில் நீர்க்கசிவு குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர். இதனை தொடர்ந்து தமிழக – கேரள அதிகாரிகளிடம் அணையின் மராமத்து பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். மேலும் முல்லைபெரியாறு கண்காணிப்பு அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் தமிழக – கேரள அதிகாரிகளிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பவுள்ளனர்.