குன்னூர் : நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. குறிப்பாக குன்னூரில் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி கடந்த 23 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை நடக்கவிருந்தது.
4 நாட்களுக்கு திட்டமிட்டிருந்த தோட்டக்கலை துறையினர் நேற்று பரிசளிப்பு விழாவுடன் நிகழ்ச்சியை நிறைவடைவதற்கு முடிவு செய்தனர். ஆனால் கனமழையால் ரெட் அலர்ட் காரணமாக சிம்ஸ் பூங்கா நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.
சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருந்த பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பழக்கண்காட்சி உருவங்கள் சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் வெறிச்சோடியது.
இதனால் நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள பூங்கா வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் பூங்கா நுழைவு வாயிலில் அலங்கரிக்கப்பட்ட பழங்களின் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச்சென்றனர்.
அதேபோல தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பூங்கா, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள டால்பின் நோஸ் மற்றும் லாம்ஸ் ராக் ஆகிய சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு சில சுற்றுலா பயணிகள் டால்பின் நோஸ் செல்லும் சாலையில் மேகக்கூட்டங்களையும், தேயிலை தோட்டங்களையும் ரசிக்க அதிகளவில் வாகனங்களில் அந்த பகுதிக்கு சென்றனர்.
மேலும் இதனை அறிந்து அப்பகுதிக்கு சென்ற மேல் குன்னூர் போலீசார், உள்ளூர் கிராம மக்கள் வாகனங்களை மட்டும் அனுமதித்தத்தோடு, சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.
சுற்றுலா தல்ங்கள் அடைக்கப்பட்டதால் எங்கே செல்வது என்பதை அறியாத சுற்றுலா பயணிகள், மலை ரயில் இயக்கப்பட்டு வந்ததை அறிந்தவுடன் பயணம் மேற்கொண்டு நேற்றைய பொழுதை ரயில் நிலையங்களிலேயே களித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் குன்னூர் ரயில் நிலையம் களை கட்டியது.
குறிப்பாக குன்னூர் – ஊட்டி இடையேயும், குன்னூர் – மேட்டுப்பாளையத்திற்கு இடையேயும் சுற்றுலா பயணிகள் பயணிக்க ஆர்வம் காட்டினர். இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள பயணச்சீட்டு வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருந்து பயணித்தனர்.
இதற்கிடையே தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள லாம்ஸ்ராக் மற்றும் டால்பின்நோஸ் போன்ற சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இன்றும் தடை விதித்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.