சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, வெள்ள தடுப்பு பணிகளை நீர்வளத் துறை தொடங்க முடிவு செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக சென்னையில் பக்கிங்காம் கால்வாயை ரூ.31 கோடியில் சீரமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. மேலும் பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலுக்கு கால்வாய் அமைக்கும் பணியும் தொடங்க உள்ளது.
பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கும் போது எடுக்கப்படும் வண்டல் மண்ணை, கரையோர பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய சென்னையில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும் விதத்தில் பல்வேறு வளைவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் வெள்ள தடுப்பு பணியை முடுக்கிவிட்டு இருக்கிறோம். இந்த பணிகள் அக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும்’’ என்றார்.