டெல்லி: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். ஹேமந்த் சோரனின் ஆட்சியில் நில அபகரிப்பு, பண மோசடி மற்றும் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. நில மோசடி வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ரஞ்சன் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பண மோசடி தொடர்பான வழக்கில் கடந்த 14ம் விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
ஆனால் சுதந்திர தின நிகழ்வுகளை காரணம் காட்டி, நேரில் ஆஜராவதை சோரன் தவிர்த்திருந்தார். இதை தொடர்ந்து 2வது முறையாக நேற்று ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அதனை நிராகரித்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனை ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவர் அனுப்பிய கடிதத்தில் சோரன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் காழ்புணர்ச்சியால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.