Sunday, June 15, 2025
Home செய்திகள்இந்தியா பணம், நகைகளை பறிக்கும் நோக்கத்தில் 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த கில்லாடி பெண்: உத்தரபிரதேசம் டூ ராஜஸ்தான் வரை பரபரப்பு

பணம், நகைகளை பறிக்கும் நோக்கத்தில் 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த கில்லாடி பெண்: உத்தரபிரதேசம் டூ ராஜஸ்தான் வரை பரபரப்பு

by Suresh

ஜெய்ப்பூர்: பணம், நகைகளை பறிக்கும் நோக்கத்தில் 7 மாதங்களில் 25 பேரை திருமணம் செய்த கில்லாடி பெண்ணை ராஜஸ்தான் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோப்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு சர்மா என்பவர் கடந்த 3ம் தேதி காவல்துறையில் அளித்த புகாரில், ‘எனது திருமணத்திற்கு வரன் பார்த்து தரும்படி திருமண ஏஜெண்ட்களான சுனிதா மற்றும் பப்பு மீனா ஆகியோரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தேன். அவர்கள் அனுராதா பஸ்வான் (23) என்பவரை மணமகளாக எனக்கு அறிமுகம் செய்தனர்.

தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20ம் தேதி உள்ளூரில் உள்ள நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டோம். ஆனால் கடந்த 2ம் தேதியன்று வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுடன் அனுராதா தப்பிச் சென்றுவிட்டார்’ என புகாரளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் விசாரணையை மேற்கொண்ட போலீசார், அனுராதாவால் பாதிக்கப்பட்ட பலரையும் அடையாளம் கண்டுள்ளனர். அதோடு, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பல மோசடி நபர்களின் விவரங்களும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராதா, குடும்ப பிரச்னை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து போபாலில் குடியேறினார். அவர் உள்ளூர் திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏஜெண்டுகள் வாட்ஸ்-ஆப் வாயிலாக மணமகள்களை அறிமுகப்படுத்தி, தங்களது சேவைக்கு லட்சக் கணக்கில் கட்டணம் வசூலித்துள்ளனர்.

அதன்படி, திருமணம் நடந்தும் ஒரே வாரத்தில் மணமகனை விட்டு மணமகளான அனுராதா ஓடிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஏழே மாதங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பேரை மணமுடித்து, பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்றுள்ளார். அந்த பெண்ணை, போபாலில் வைத்து மதோப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர் திருமண மோசடிகளில் ஈடுபட்ட அந்த பெண், திருமணத்திற்காக தீவிரமாக பெண் தேடும் நபர்களை குறிவைத்து திருமணம் செய்து, குறுகிய காலத்திலேயே அவர்களிடம் உள்ள நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அனுராதா தனது திட்டங்களையும், நடவடிக்கைகளையும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் திறம்பட செயல்படுத்தியுள்ளார். மணமகளாக தன்னை முன்னிறுத்தி, தேவையான ஆவணங்களை பயன்படுத்தி சட்டப்படி திருமணம் செய்துகொள்வார். சில நாட்கள் மட்டும் கணவருடன் தங்கியிருந்து, சரியான நேரம் பார்த்து கையில் கிடைக்கும் பணம், நகை மற்றும் மின்சாதன பொருட்களுடன் இரவோடு இரவாக அங்கிருந்து தப்பிச் சென்று விடுவார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi