விருதுநகர்: மோடியை பிரதமராக வர விடமாட்டோம் என்று சொல்ல எடப்பாடிக்கு தைரியம் இல்லை என்று மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் மாணிக்கம்தாகூர் எம்பி நேற்று அளித்த பேட்டி: 9 வாரங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு உரிய சம்பளத்தை ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கவில்லை. ஆனால் டெல்லியில் இருந்து வந்து தமிழ்நாட்டை தூய்மை செய்வது போல் நாடகமாடி வருகிறார். அவர் அவரது வேலையை சரியாக செய்து ஏழை, எளிய மக்களின் கஷ்டத்தை போக்க வேண்டும். கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பெயருக்கு அவப்பெயர் உண்டு பண்ணுவதற்காக பாஜவினர், கர்நாடக அமைப்பினரின் மூலம் மொழி பிரச்னையை உண்டாக்கி வருகின்றனர்.
அதனை பார்த்து இங்குள்ள சீமான் போன்றவர்கள் பொய்யான அரசியல் செய்து வருகின்றனர். பாஜ, அதிமுக கூட்டணி முற்றிலும் முடிவுக்கு வரவில்லை. மோடியை பிரதமராக வர விடமாட்டோம் என்று சொல்ல எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினருக்கு தைரியம் இல்லை. இன்னும் பின் வழியாக சென்று மோடியிடம் மலர்செண்டு கொடுத்துவிட்டு வருகிறார்கள். அதனால் இந்த கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. வெளி வேஷத்திற்காகவும், அண்ணாமலைக்காகவும் கூட்டணி முறிந்ததாக நாடகமாடி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.