சென்னை: புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போய்விடும். எனவே, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.