Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

மோடி, அமித்ஷாவின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தஞ்சை: மோடி, அமித்ஷாவின் பருப்பு வடநாட்டில் வேகலாம். ஆனால் தமிழ்நாட்டில் வேகாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தஞ்சை செங்கிப்பட்டி அடுத்த திருமலைசமுத்திரத்தில் மாவட்ட இளைஞரணி சந்திப்பு கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் அரசின் திட்டங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பி பார்த்து பாராட்டி வருகிறது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் அமைந்தது கலைஞர் மகளிர் உரிமை திட்டம். இதை தடுத்து நிறுத்த பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

இதையறிந்ததும், ‘நீ என்னுடைய தமிழ்நாட்டு மகளிருக்கு 1000 ரூபாய் கொடுக்கிறதை நிப்பாட்டுறியா? நான் ரூ.5000 கொடுக்கிறேன்னு 3 நாட்களுக்கு முன் கொடுத்தார் நமது முதல்வர். இதுமட்டுமின்றி மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். என்ன செய்வதென்று புரியாமல் பாசிச சக்திகளும், அடிமைகளும் குழப்பத்தில் இருக்காங்க. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் மோடி, அமித்ஷா தொடர்ந்து வருவார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி மட்டும் வராது. மோடி, அமித்ஷாவே... உங்களுடைய பருப்பு உத்தர பிரதேசத்தில், பீகாரில், வடநாட்டில் வேகலாம்.

தமிழ்நாட்டில் ஒருபோதும் வேகவே வேகாது. தமிழ்நாட்டுக்கு ‘டபுள் இன்ஜின்’ சர்க்கார் வேண்டும் என்று மோடி சொல்கிறார். முதலில் உங்கள் வண்டியோட டயர்களை பாருங்கள். தமிழ்நாட்டில் நீங்கள் கூட்டணி வைத்திருப்பவர்கள் அனைவருமே பஞ்சரான டயர்கள். உங்களுடைய பஞ்சரான டயர்களும், பங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழ்நாட்டில் என்றைக்கும் ஓடவே ஓடாது. எடப்பாடி பழனிசாமி பாஜவின் மிகப்பெரிய அடிமையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றி கொண்டிருக்கிறது. டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்க போகும் போர்தான் வரும் சட்டமன்ற தேர்தல்.

தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது என்று டெல்லிக்கு நாம் உணர்த்த வேண்டிய தேர்தல். தமிழ்நாடு என்றைக்கும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான் என்பதை உணர்த்த வேண்டிய தேர்தல். ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து பேசுங்கள். நம்மிடம் சாதனைகள் இருக்கிறது, வரலாறு இருக்கிறது. மோடி வந்ததும் உதயசூரியன் மறைந்து விட்டது என்று எடப்பாடி புதுசாக ஒரு உருட்டு உருட்டிட்டு இருக்கிறார். உதயசூரியன் ஒவ்வொருவரின் இதயத்திலும், ரத்தத்திலும் ஊறிப்போன சின்னம். வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேலாக திமுக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.