Monday, June 23, 2025
Home செய்திகள்Showinpage 3 எம்எல்ஏ, முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவு ஆடிட்டர், சட்ட வல்லுநர்களுடன் ராமதாஸ் ஆலோசனை

3 எம்எல்ஏ, முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவு ஆடிட்டர், சட்ட வல்லுநர்களுடன் ராமதாஸ் ஆலோசனை

by Ranjith

* பாமகவை கைப்பற்ற தந்தை – மகன் போட்டா போட்டி, கட்சி நிர்வாகிகள் நீக்கம், சேர்த்தல் படலமும் தொடர்கிறது

சென்னை: மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ஆடிட்டர், சட்ட வல்லுநர்களுடன் ராமதாஸ் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். பாமகவை கைப்பற்ற இருதரப்பும் போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தந்தை கட்சி நிர்வாகிகளை நீக்குவதும், மகன் மீண்டும் அவர்களை சேர்ப்பதும் தொடர் கதையாகி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ம் தேதி பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். தந்தையே, மகன் மீது குற்றச்சாட்டை கூறியது பாமகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. தந்தை, மகன் சண்டை பேசும் பொருளாகி வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவித்தார்.

அதன்படி சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில் அன்புமணி தலைமையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பாமக பொருளாளர் திலகபாமா, செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பாமகவின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள் அன்புமணிக்கு வழங்கினர். உறுப்பினர் அட்டையில் ராமதாஸ், அன்புமணி உருவப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அன்புமணி கூட்டம் நடத்தி கொண்டு இருக்கும் போதே, மாநில பொருளாளர் திலகபாமாவை ராமதாஸ் அதிரடியாக நீக்கினார். மேலும் மயிலம் எம்எல்ஏ சிவக்குமாரின் மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்தார். இதேபோல இன்னும் பல மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களை அதிரடியாக நீக்கி, புதிய மாவட்ட செயலாளர்களை ராமதாஸ் அறிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் பாணியில் ராமதாசால் நீக்கப்பட்ட மாநில பொருளாளர் திலகபாமாவுக்கு மீண்டும் அதே பதவியை அன்புமணி வழங்கினார். மேலும் ராமதாசால் நீக்கப்பட்ட மற்றவர்களும் அதே பதவியில் நீடிப்பார்கள் என்றும் அறிவித்தார். பொதுக்குழுவை கூட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான தனக்கு தான் பாமகவில் முழு அதிகாரம் உள்ளது என்று கூறி அனைத்து நிர்வாகிகளையும் தன் பக்கம் அன்புமணி இழுத்து வருகிறார். தந்தை கட்சியினரை நீக்கி புதிய நிர்வாகிகளை அறிவிப்பதும், மகன் போட்டிக்கு நீக்கியவர்களை அதே பதவியில் நீடிப்பார்கள் என்று அறிவிப்பதும் பாமகவினர் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

யார் பேச்சை கேட்பது என்று தெரியாமல் பாமகவினர் திக்கி திணறி வருகின்றனர். இந்நிலையில் 2வது நாளாக நேற்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்தினார். நேற்று காலையில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 15 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் அன்புமணியின் பனையூர் இல்லத்தில் நேற்று காலை தர்மபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேசன், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் சந்தித்து பேசினர். பாமக எம்எல்ஏக்கள் அன்புமணியை சந்தித்து பேசியது ராமதாசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இதேபோல அன்புமணி நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாமகவில் 5 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதில் 3 எம்எல்ஏக்களின் ஆதரவு அன்புமணிக்கு உள்ளது. அதே போல பாமக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ, அருள் எம்எல்ஏ ஆகியோருக்கும் அன்புமணி அழைப்பு விடுத்துள்ளதால் பாமகவை கையகப்படுத்துவது தந்தையா, மகனா என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, கட்சிக்கு நிதி தேவைப்படுகிறது, விருப்பம் உள்ளவர்கள் கியுஆர்கோடு மூலம் நிதி வழங்கலாம் என அறிவித்தார்.

ஏற்கனவே கட்சி நிதி விவகாரங்களை கவனித்து வந்த ராமதாஸ், அன்புமணியின் இந்த திடீர் அறிவிப்பால் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அன்புமணி கட்சி நிதி வசூலிப்பதை தடுக்க முடிவு செய்த ராமதாஸ், நேற்று காலை ஆடிட்டர் சுப்புரத்தினம் மற்றும் கர்நாடக மாநில தொழிலதிபர் சுரேஷ் பாபு ஆகியோர் மூலம் பாமக சொத்துகள் மற்றும் தனது சொத்துக்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ராமதாசை எதிர்த்து அன்புமணி கட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது ராமதாஸ் பாமகவின் நிதிநிலை அனைத்தும் தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஆடிட்டர் மூலம் கணக்குகளை பார்த்து வருகிறார். கட்சியின் அனைத்து கட்டுப்பாடுகளும் தன்னிடமே உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ராமதாசின் செயல் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதேநேரத்தில், பாமக எம்எல்ஏக்கள் 3 பேர், கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதால், ராமதாஸ் அதிருப்தியடைந்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய ராமதாஸ், ‘பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன். இதற்கான அதிகாரம் எனக்கு உள்ளது. பாமக தொடங்கிய போது உருவாக்கப்பட்ட சட்ட விதிகளில் எனக்கு அதிகாரம் உள்ளது’ என்று கூறினார். ஒரு பக்கம் அன்புமணி கட்சியை கைப்பற்ற முக்கிய நிர்வாகிகளை வளைத்து ஆதரவை பெருக்கி வரும் நிலையில், அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்க ராமதாஸ் முடிவு செய்து உள்ளார்.

இதற்காக சட்ட வல்லுநர்களுடனும் தைலாபுரத்தில் நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ராமதாசை சந்திக்க கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜி, சமூக நீதிப் பேரவை மாநில செயலாளர் பாலாஜி ஆகியோர் வந்தனர்.

அவர்கள் ராமதாசுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். தந்தை-மகன் மோதலால் கட்சியை கைப்பற்ற இருவரும் முயற்சிக்கும் நிலையில், எந்த பக்கம் போவது என தெரியாமல் நிர்வாகிகள், தொண்டர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று 3வது நாளாக பாமக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi