Monday, June 23, 2025
Home செய்திகள்Showinpage பெருந்துறையில் வேளாண் கண்காட்சி தொடக்க விழாவில் 4,500 பேருக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி: ரூ.177 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்

பெருந்துறையில் வேளாண் கண்காட்சி தொடக்க விழாவில் 4,500 பேருக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி: ரூ.177 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்

by Francis

ஈரோடு: பெருந்துறையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, 4,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.177 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே இன்றும், நாளையும் நடக்கிறது. இதை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை கோவை வந்தார். பீளமேடு விமான நிலையத்தில் முதல்வரை அமைச்சர் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முதல்வர், காரில் ஈரோடு புறப்பட்டார். வழியில் திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளியில் உள்ள சொர்ணம் மகால் மண்டபத்தில் நடந்த திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் மகள் எஸ்.செந்தமிழ் மற்றும் யோகேஸ் கண்ணா ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.

இதையடுத்து அங்கிருந்து, காரில் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் துறை சார்பில் 218 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சு.முத்துசாமி முன்னிலையில், ரூ.159.52 கோடி மதிப்பிலான 11 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.15.70 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 4,533 பயனாளிகளுக்கு ரூ.26 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.177 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார். இதையடுத்து கார் மூலம் மாலையில் சேலத்துக்கு வருகை தரும் முதல்வருக்கு மாவட்ட எல்லை யான நவப்பட்டி ஊராட்சி பெரும்பள்ளம் என்ற இடத்தில், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அமைச்சர் ராஜேந்திரன், டி.எம்.செல்வகணபதி எம்பி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர், அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து பெரும்பள்ளத்தில் இருந்து மேட்டூர் அணை வரை சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு-ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் பொதுமக்களும், கட்சியின் இருவண்ண கொடிகளை ஏந்தியபடி திமுக தொண்டர்களும், முதல்வரை வரவேற்கின்றனர். மேட்டூரில் உள்ள ஆய்வு மாளிகையில் இன்றிரவு தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை காலை 9.30 மணிக்கு காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கான தண்ணீரை திறந்து வைக்கிறார். முதல்வர் வருகையையொட்டி மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், கோவை சரக டிஐஜி சசிமோகன் மற்றும் ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 1500 போலீசார் மற்றும் 20 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi