*போலீசார் விசாரணை
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பெரிய ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கார்பெண்டர் உடலை போலீசார் கைப்பற்றினர். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பெரிய ஏரியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலை அடுத்து திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருக்கோவிலூர் அடுத்த தேவியகரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரி (29) என்பதும், கடந்த பத்து வருடமாக கார்பெண்டர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவருக்கு கடந்த ஐந்து வருடத்திற்கு முன் திருமணம் நடந்து நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீண்டும் மாலை வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கம் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் ஆய்வு செய்து கார்பெண்டர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.