Sunday, July 13, 2025
Home செய்திகள்Banner News இரு நாடுகளிடையே நீடிக்கும் ஏவுகணை தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் போர் கப்பல்கள், விமானங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்: ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கைக்கு அமெரிக்கா பின்வாங்குகிறதா?

இரு நாடுகளிடையே நீடிக்கும் ஏவுகணை தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் போர் கப்பல்கள், விமானங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்: ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கைக்கு அமெரிக்கா பின்வாங்குகிறதா?

by MuthuKumar

நியூயார்க்: இஸ்ரேல் – ஈரான் நாடுகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி சரணடைய வேண்டும் என்று டிரம்ப் கூறிய நிலையில், அவர் மறுத்துள்ளார். ஈரான் போர் தொடங்கி விட்டதாக அறிவிப்பு வெளியிட்டு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை தாக்கி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் விமானங்கள், போர் கப்பல்களை பாதுகாப்பான இடத்துக்கு அமெரிக்க நகர்த்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஈரான் இடையே நடந்து வரும் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்காகவும், தன்னை தற்காத்து கொள்ளவும் இஸ்ரேல் கடந்த 13ம் தேதி ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. இதில், ஈரானின் முக்கியமான அணு மையங்கள் சேதமடைந்த நிலையில், பல அணு விஞ்ஞானிகளும், ராணுவ தளபதிகளும் பலியாகினர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து பாதியிலேயே புறப்பட்டு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று முன்தினம் இரவு வெள்ளை மாளிகையின் சிட்சுவேஷன் அறையில் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு, ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். அதாவது, ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்’ என்றார். அதே நேரத்தில் ஈரான் உச்ச தலைவர் காமேனியை பழிதீர்த்தால் மட்டுமே இப்போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், தனது மக்கள் மீது ஈரான் அக்கறை காட்டவில்லை. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சரணடைய வேண்டும். ஈரான் எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பும் இல்லாமல் முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. வரும் நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அடுத்த வாரம் பெரிய விஷயம் நடக்கலாம். இதில் ஒரு வாரம் என்பது அதிகமாக கூட இருக்கலாம். அதற்கு முன்பு கூட ஏதாவது நடக்கலாம்’ என கூறியுள்ளார்.

இதற்கு ஈரானின் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனி, ‘ஈரான் சரணடையாது. தொடர்ந்து போரை சமாளிக்கும். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தால் அந்த நாட்டின் பாதுகாப்பு படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். இன்னும் நிலைமை மோசமாகும்’ என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மோதல் முற்றியுள்ளது. இரு நாடுகளும் 7வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில்தான் தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. டிரம்ப் ஒருபுறம் ஈரானை மிரட்டி வந்தாலும்கூட மறுபுறம் ஈரான், தங்களை குறிவைத்து தாக்கி விடுமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் விமான தளம், கடற்படை தளங்களில் இருந்து விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்பட பல முக்கிய ஆயுதங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அதேபோல் அமெரிக்கா ஈரானை எதிர்த்து வருகிறது. தற்போதும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை கடுமையாக கண்டித்து வருவதோடு மிரட்டியும் வருகிறார். இதனால் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க- ஈரான் இடையே தாக்குதல் நடக்கலாம்.

அப்படி ஒருவேளை நடப்பதாக இருந்தால் ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் படை தளங்களை குறிவைத்து தாக்கலாம். இதனால் முன்னெச்சரிக்காக அமெரிக்கா இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன்படி பக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தில் இருந்து போர்க்கப்பல்கள் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல் கத்தாரில் உள்ள அலத் உதித் விமான தளத்தில் இருந்தும் போர் விமானங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இது வழக்கமான நடவடிக்கை கிடையாது. அமெரிக்கா படை வீரர்கள் மற்றும் போர்க்கப்பல், போர்விமானங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியஸ்தம் செய்ய தயார்; புதின் அறிவிப்புக்கு டிரம்ப் எதிர்ப்பு
இஸ்ரேல், ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்கவும், ஈரான் அமைதியாக அணுசக்தி திட்டங்களை தொடர்வதற்கும் ஒரு தீர்வை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தையை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக கூறியுள்ளார். சர்வதேச ஊடகத்தினர் மத்தியில் பேசிய அவர், ‘இது ஒரு நுட்பமான பிரச்னை. ஒரு தீர்வை எட்ட முடியும்,’ என்றார்.

அப்போது, ஈரான் மத தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் கொலை செய்து விட்டால், ரஷ்யாவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அத்தகைய சாத்தியக்கூறு பற்றி விவாதிக்கக்கூட விரும்பவில்லை. நாங்கள் யார் மீதும் எதையும் திணிக்கவில்லை. இந்த சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கான சாத்தியமான வழியை மட்டுமே நாங்கள் முன்மொழிந்துள்ளோம். இறுதி முடிவு அந்த நாடுகளிடமே உள்ளது’ என்றார். புதின் தெரிவித்த இந்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்துங்கள் என்றும், அதன்பிறகு, இந்த பிரச்னையில் கவனம் செலுத்தலாம் என்று புடினிடம் டிரம்ப் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi