புதுடெல்லி: நீட் தேர்வுகள் குறித்த தவறான தகவல்களை தடுப்பதற்காக தேசிய தேர்வு முகமை கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் 106 டெலிகிராம் சேனல்கள், 16இன்ஸ்டாகிராம் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கு அனுப்பியுள்ளது.
நீட் மருத்துவ நுழைவு தேர்வு வரும் 4ம் தேதி நடைபெறுகிறது. எந்த வித இடையூறு இன்றி தேர்வு நடைபெறுவதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகம் மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட சில முறைகேடுகள் நடந்தன.
அதனால் இந்தாண்டு எந்தவித முறைகேடுகளும் இன்றி தேர்வுகளை நடத்த ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்,சமீபத்தில் தொடங்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான உரிமைகோரல் அறிக்கையிடல் இணையதளம் மூலம் பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், தவறான தகவல்களைப் பரப்புவதிலும் மாணவர்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதிலும் ஈடுபட்டுள்ள 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேர்வு முகமை அடையாளம் கண்டுள்ளது. அந்த சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேசிய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்துக்கு தேசிய தேர்வு முகமை கோரிக்கை விடுத்துள்ளது.