Monday, December 11, 2023
Home » மாணவர்கள் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற தேவையில்லை: ஐகோர்ட் உத்தரவு

மாணவர்கள் சேர்க்கையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற தேவையில்லை: ஐகோர்ட் உத்தரவு

by Ranjith

சென்னை: சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாக சிறுபான்மை மாணவர்களை சேர்க்க கூடாது 1998ம் ஆண்டு அரசாணையை மீறியதாக சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை கடந்த 2021 நவம்பரில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், 1998ம் ஆண்டு அரசாணையின் நிபந்தனையை எதிர்த்தும், கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து வழங்கக் கோரியும் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார்., சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்தை சிறுபான்மை பிரிவினருக்கும் மீதமுள்ள 50 சதவீதத்தை மதிப்பெண் தகுதி அடிப்படையிலும் சேர்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது தேசத்தின் நலன் சார்ந்தது. சிறுபான்மை அந்தஸ்து என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குத்தான் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டப்படி, கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவெடுக்க ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

சிறுபான்மை அந்தஸ்து குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. அனைத்து சிறுபான்மையினருக்கும் அரசியலமைப்பில் கல்வி, மொழி ஆகியவற்றில் உரிமை தரப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தில் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி இடஒதுக்கீட்டு கொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. 50 சதவீத இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்தாலும், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு தகுதி அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம். அப்படி மாணவர்கள் சேரும் பட்சத்தில் அந்த இடங்கள் 50% சிறுபான்மையினர் ஒதுக்கீட்டுக்குள் வராது. எனவே, மனுதாரர் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்த அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?