சென்னை: வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து, சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்து வருகிறது. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் விற்பனை செய்யவும், வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தவும் பல்வேறு துரித நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அவரது உத்தரவின்படி, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க கூட்டுறவுத் துறையின் மூலமாக முதற்கட்டமாக சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் என 14 மையங்கள் மூலம் இன்று (நேற்று) முதல் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூட்டுறவு துறையின் மூலம் பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் ஒரு கிலோ ரூ.30 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய காலத்துக்குள் வெங்காயம் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.