சென்னை: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அமலாக்க துறையின் காவல் விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அப்போது, நீதிபதி செந்தில் பாலாஜி, ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இந்த நீதிமன்றத்திற்கு இல்லை. முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறும் உத்தரவிட்டார்.இதையடுத்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரினார். இதை கேட்ட நீதிபதி கவனிக்கிறேன். மனு பட்டியலிடப்பட்டவுடன் விசாரிக்கிறேன் என்றார்.
ஆனால் மனு பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் மீண்டும் இன்று காலை நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி அல்லி, இந்த மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் அருண், பரணி ஆகியோரின் முறையீட்டை ஏற்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, ஐகோர்ட்டை அணுகி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என முடிவு எடுக்க அறிவுறுத்தினார். உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் மனுவை விசாரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.