சென்னை : பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள், சென்னை எழிலகத்தில் இன்று (03.05.2025) நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் மற்றும் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து இணை இயக்குநர், (கள்ளர் சீரமைப்பு) மற்றும் 38 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு அறிவுரைகள் வழங்கினார்.
குறிப்பாக விடுதிகளுக்கு தரமான உணவுப்பொருட்கள் வாங்கி வழங்குவதனை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். மேலும் புதிய விடுதிகள் துவங்குதல், பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்துதல், சொந்த கட்டடங்கள் கட்டுதல், கல்லூரி விடுதிகளில் மாணவ/மாணவியர் எண்ணிக்கையினை அதிகரித்தல், விடுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல் ஆகிய இனங்களில் சிறப்பு கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார்.
மேற்படி, ஆய்வுக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.சா.விஜயராஜ்குமார், இ.ஆ.ப., அரசு சிறப்பு செயலாளர், திருமதி. வ. கலையரசி, இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் முனைவர்.சீ.சுரேஷ் குமார், இ.ஆ.ப., மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு.வா.சம்பத், இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.