தர்மபுரி: அரூர் அருகே சுற்றுலாத்துறை அமைச்சரை தடுத்து நிறுத்தி மோதலில் ஈடுபட்ட 2 அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா மற்றும் சர்க்கரை ஆலை துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று காலை சென்றார்.
அப்போது ஆலையின் நுழைவுவாயில் பகுதியில் நின்றிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி ஆகியோர் அமைச்சரை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல் துறையினர், எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் வந்த அதிமுகவினரை தடுத்து அமைச்சரை ஆய்வு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அங்கு நடந்த விவசாயிகள் சங்க ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்று 2 அதிமுக எம்எல்ஏக்கள் பேசினர். அப்போது, பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி பேசுகையில், அமைச்சர் ராஜேந்திரனை குற்றம்சாட்டிப் பேசினார். அப்போது திமுகவினர், 2 அதிமுக எம்எல்ஏக்களையும் வெளியேறும்படி கூச்சலிட்டனர்.
இதனால் திமுக – அதிமுகவினர் இடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த போலீசார் 2 எம்எல்ஏக்களையும் கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றி கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். அதன்பின்னர் தொடர்ந்து அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த சம்பவத்தினால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.