Saturday, December 2, 2023
Home » 10க்கும் மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதித்த உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி

10க்கும் மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதித்த உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி

by MuthuKumar

மதுரை: 10க்கும் மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட 750 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், இளஞ்சிறையைச் சேர்ந்த பினோய், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் கட்டிடப் பணிகளுக்கு கிராவல், ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட், குவாரி தூசி மற்றும் மணல் சப்ளை செய்யும் ஒப்பந்தம் பெற்றுள்ளோம். கேரளாவில் கனிமங்கள் எடுக்க அனுமதி இல்லை. இதனால் ஜிஎஸ்டி, நடைச்சீட்டு உள்ளிட்ட உரிய அனுமதியுடன் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்கிறோம்.

10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதித்து கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால், தமிழ்நாட்டில் இருந்து 10 சக்கரத்திற்கு அதிகமான லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல முடியவில்லை. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பலவகையான கட்டுமானப் பணிகள் பாதித்துள்ளன. எனவே, அந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவு சட்டவிரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 10 சக்கரத்திற்கு மேற்பட்ட 750 லாரிகளில் தினமும் கனிமங்கள் கொண்டு செல்லலாம் என அனுமதித்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து கனிமவளத்துறை கூடுதல் தலைமை ெசயலர், போக்குவரத்து கமிஷனர் மற்றும் கன்னியாகுமரி கலெக்டர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, தமிழ்நாட்டில் அதிகளவில் கனிமங்கள் கொண்டு செல்வதால் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, சாலைகளும் பாதிக்கப்படுகின்றன. வாகனங்களின் எடை மற்றும் வேகத்தின் அளவை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு. பொதுநலன் கருதியே அரசு முடிவெடுத்தது. தனி நீதிபதியின் உத்தரவால் பொதுநலன் மட்டுமின்றி, அரசின் கொள்கை ரீதியான முடிவும் பாதிக்கிறது எனவே, தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தினமும் 750 லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும் தனி நீதிபதியிடம் நிலுவையில் உள்ள பிரதான வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டுமென்றும், கோவில் ப்ளூ மெட்டல் நிறுவனம் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?