அண்ணாநகர்: நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடியதை தட்டிக்கேட்டவரை சரமாரியாக தாக்கிய கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகர் பகுதியில் நடுரோட்டில் கேக் வெட்டி ஒரு கும்பல் பிறந்தநாள் கொண்டாடியதுடன் ஆட்டம் போட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ரவி(50) என்பவர் சென்று, ‘’ ஏன் இப்படி நடுரோட்டில் நின்று கொண்டு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி பொதுமக்களுக்கு வழியை விடாமல் இடையூறு செய்கிறீர்கள்’’ என்று கேட்டு எச்சரித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த கும்பல், ரவியை சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் டி.பி சத்திரம் போலீசார் விரைந்து வந்து நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 9 பேரை கைது செய்து நடத்திய விசாரணையில், ‘’டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த சூர்யா(22) என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக சென்னை பச்சையப்பன், வைஷ்ணவி கல்லூரி மாணவர்கள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியபோது தட்டிக்கேட்ட அந்த பகுதியை சேர்ந்த ரவியை தாக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து 9 பேரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்களை நீதிமன்ற ஜாமீனில் விடுவித்தனர்.