Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் வலைகளில் பாம்புகள் சிக்கியதால் பரபரப்பு

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே செமினிப்பட்டியில் ஆண்டிபாலகர் மற்றும் உச்சிமாகாளியம்மன் கோயில் அருகில் உள்ளது செம்மணி கண்மாய். நெல் அறுவடைக்கு பிறகு கண்மாயில் உள்ள நீரில் மீன்கள் விடப்பட்டு வளர்க்கப்படும். பின்னர் பாரம்பரிய முறைப்படி இந்த மீன்களை பிடிக்கும் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று நடைபெற்றது. இன்று காலை கிராம பெரியவர்கள் துண்டு வீச, கண்மாயை சுற்றி நின்ற ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒரு சேர கண்மாயில் இறங்கினர். தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, ஊத்தா கூடை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை கொண்டு போட்டிபோட்டு மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை போன்ற மீன்கள் சிறியது முதல் பெரியது வரை பிடிபட்டது. அதே நேரத்தில் மீன்களுக்கு சமமாக வலைகளில் பாம்புகளும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்புகளை பார்த்து பலர் வலைகளை நழுவ விட்டனர்.

சிலர் பயப்படாமல் பாம்புகளை தூக்கி வீசி விட்டு மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டினர். மீன்பிடி திருவிழா நடைபெற்றால் அடுத்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் மீன்பிடி திருவிழாவில் கிடைக்கும் மீன்களை விற்பனை செய்யக் கூடாது. அதனால் அனைவரும் மீன்களை வீடுகளுக்கு கொண்டு சென்று சமையல் செய்து வழிபாடு செய்து சாப்பிட்டனர். இதனால் அந்தப் பகுதி மீன்குழம்பு வாசம் கமகமத்தது.