Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மேலக்கோட்டையூரில் அடுக்குமாடி கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வட்டாட்சியர் உறுதி: பேச்சு வார்த்தையில் முடிவு

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக புதிதாக 600க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்காக, அரசு தரிசு புறம்போக்கு வகைப்பாட்டில் 15 ஏக்கர் நிலம் கடந்த 2021ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 28ம்தேதி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த இடத்தை அளவீடு செய்தனர். இதற்கு மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ராஜீவ்காந்தி நகர் குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என்றும், தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றும் தெரிவித்தனர். அப்போது. அளவீடு செய்யும் பணி ஒத்தி வைக்கப்பட்டு நேற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் குமரேசன், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மேலக்கோட்டையூர் ஊராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தையை நடத்த பொதுமக்களை அழைத்தனர்.

ஆனால், அனைவரின் முன்னிலையில் திறந்த வெளியில் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கூறி அங்கு வர மறுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் அனைவரும் பொதுமக்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கு வந்தனர். அங்கு பேசிய பொதுமக்கள் ஏற்கனவே காவலர் குடியிருப்பில் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் முறையான கழிவுநீர் பாதை இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். இந்நிலையில் மேலும் கூடுதலாக அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் அமைந்தால் மேலும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், ராஜீவ்காந்தி நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கக்கூடாது, அவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதையடுத்து அவர்களிடம் பேசிய அதிகாரிகள் முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் திட்டத்தை நிறைவேற்ற திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது 6 ஏக்கர் பரப்பளவில் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதனால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றனர்.

மேலும், அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படும், ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாயக்கூடம் போன்றவை அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். ஆகவே அரசின் திட்டத்திற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினர். அதிகாரிகள் வாக்குறுதி அளித்தபடி பட்டா வழங்கினால் திட்டத்தை செயல்படுத்த எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் மக்கள் கூறியதையடுத்து பொது மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது மேலக்கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமி ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.