Thursday, March 28, 2024
Home » ஜப்பான் ஜெட்ரோ தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: இந்திய-ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த அழைப்பு

ஜப்பான் ஜெட்ரோ தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: இந்திய-ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த அழைப்பு

by Karthik Yash

சென்னை: ஜப்பான், ஜெட்ரோ தலைவருடன் நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, இந்திய-ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்று அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, 25ம் தேதி ஜப்பான் நாட்டின் ஒசாகா சென்றார். தொடர்ந்து அவர் 2 நாள் ஒசாகா பயணத்தை முடித்துக் கொண்டு 27ம் தேதி டோக்கியோ வந்தடைந்தார். இந்த அரசு முறை பயணங்களின் போது, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, பல்வேறு நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்தார்.

அதை தொடர்ந்து, நேற்று காலை டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு (ஜெட்ரோ) தலைவர் இஷிகுரோ நோரிஹிகோவையும், செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோவையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, ‘ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். மேலும், சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

ஜெட்ரோ தலைவருடனான இந்த சந்திப்பின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜெட்ரோ, இந்தியாவுடன் இணைந்து மிகவும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் ஜப்பானிய நிறுவனங்கள் தங்களது வர்த்தகச் செயல்பாடுகளை எளிதில் மேற்கொள்ள முக்கியப் பங்கை ஆற்றி வந்துள்ளது. இதனை மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆட்டோமொபைல், கனரக பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கும் விரிவுபடுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இன்டஸ்ட்ரி 4.0ஐ நோக்கி, தமிழ்நாட்டில் உள்ள அதிக அளவிலான சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முன்னேற்ற இந்தியாவின் ஐ.டி. திறன்களும் ஜப்பானின் உற்பத்தி நிபுணத்துவமும் உதவும். இதேபோன்ற துறைகளில் நாம் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என நம்புகிறேன். மேம்பட்ட உற்பத்தியில் சிறந்த பங்குதாரர்கள் ஜப்பானியர்கள். எனவே, தமிழ்நாட்டில் திறன்மிகுந்த மனிதவளம் உள்ளதால் 4.0 போன்ற தொழில்நுட்பப் பகுதிகள் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான ஒரு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இந்தியா- ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுத்ததற்கும், ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கிறேன். சென்னையில் நடைபெற உள்ள 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi