ஜலான்: உத்தரபிரதேசத்தில் 5 வயது சிறுவனுக்கு சிகரெட் புகைக்க கற்று தந்த அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜலான் நகரின் குத்தாண்ட் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் சுரேஷ் சந்திரா பணியாற்றுகிறார். இங்கு சளி பாதித்த 5 வயது சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அந்த சிறுவனிடம் சிகரெட் பிடித்தால் சளி சரியாகி விடும் என்று சொல்லி, டாக்டர் சுரேஷ் சந்திரா, சிறுவனின் வாயில் சிகரெட்டை வைத்து பற்ற வைக்கிறார். மூச்சை வௌியே விடாமல் சிகரெட் புகையை உள்ளிழுக்கும்படி சுரேஷ் சந்திரா சொல்கிறார். ஆனால் சிறுவன் புகையை உள்ளே இழுக்காமல் அவதிப்படும் சிறுவனை டாக்டர் கண்டிக்கிறார்.
இந்த காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் குவித்து வருகிறது. இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி நரேந்திர தேவ் சர்மாக அளித்த புகாரின் அடிப்படையில் டாக்டர் சுரேஷ் சந்திரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் சுரேஷ் சந்திராவை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி நரேந்திர தேவ் சர்மா கூறுகையில், “கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரியும், மருத்துவமருமான எஸ்.டி.சவுத்ரி தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணை அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.