சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளியில் ரோட்டரி கிளப் இதயமே மற்றும் அப்போலோ மருத்துவமனை சார்பில் உலக இதய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: இதயம் காப்போம் திட்டத்தில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மாவட்ட தலைநகரங்களில் 8 கிலோமீட்டர் நடை பாதை அமைக்கும் திட்டத்தை முதல்வர் பெசன்ட் நகரில் வரும் நவ.4ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
மாநில அரசின் மருத்துவ ஒதுக்கீடு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான ஒதுக்கீட்டில் 85 சதவீத ஒதுக்கீடு மாநில அரசும் 15 சதவீத ஒதுக்கீடு ஒன்றிய அரசும் செய்ய வேண்டும். மாநில அரசில் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் கடந்த ஆண்டு 6 இடமும் இந்த ஆண்டும் காலியாக உள்ளது. முதல்வர் அறிவுறுத்தலின்படி ஒன்றிய அரசுக்கும் என்எம்சி நிர்வாகத்திற்கும் கடிதங்களை அனுப்பி இருக்கிறோம். காலியிடங்களை நிரப்ப வேண்டும் அல்லது காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
இதனை தெரிவித்தும் தற்பொழுது வரை இடங்கள் நிரப்பப்பட்டவில்லை. ஸ்டான்லி போன்ற மிக பெரிய மருத்துவமனையில் கூட 2 இடங்கள் காலியாக உள்ளது என்பது வருத்தத்திற்குரியது. முதல்வர் அறிவுறுத்தலின்படி நாளையோ நாளை மறுநாளோ சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகாவது காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.