Saturday, July 19, 2025
Home ஆன்மிகம் மருத்துவத்துறையா? இதோ கிரக அமைப்புகள்…

மருத்துவத்துறையா? இதோ கிரக அமைப்புகள்…

by Lavanya

சென்ற இதழில் ஆசிரியராகப் பணிபுரிவதற்கு எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் துணை புரியும் என்பதை சில அசல் ஜாதகங்கள் வைத்து ஆராய்ந்தோம். ஒருவர் மருத்துவர் ஆவதற்கு எத்தகைய கிரக நிலைகள் அமைந்திருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். பொதுவாகவே ஜாதக விதிகள் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வதைப் பார்க்கிறோம். சிலர் சூரியன் வலுவாக இருக்க வேண்டும் என்பார்கள். இல்லை, செவ்வாய் வலுவாக இருக்க வேண்டும் என்பார்கள். இன்னும் சிலர் மருந்துக்காரகன் கேது வலுவாக இருக்க வேண்டும் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தக் கிரக நிலைகளைவிட, மனம் வலுவாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் இந்த கிரக நிலைகளை நாம் பார்க்க வேண்டும்.

எனக்கு நன்கு தெரிந்தவர்களில் சிலர், மருத்துவ விதிகளின் பிரகாரம் ஒரு மருத்துவராகும், ஜாதக அமைப்பை பெற்றிருந்தாலும், அவர்கள் மனது மருத்துவம் படிப்பதில் செல்லாததால், பொறியியல் படித்து நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஆனாலும், அவர்கள் மருத்துவம் சம்பந்தமாக அதிகம் பேசுவார்கள். சில நேரங்களில் அவர்கள் மருத்துவரிடம் பேசுவதைப் பார்த்தால், இவ்வளவு விஷயங்கள் மருத்துவத்தில் தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று தோன்றும்.இப்படி பல வினோத அமைப்புகள் எல்லாம் ஜாதகத்தில் இருக்கின்றன. மருத்துவராகப் படித்த சிலர் அதைவிட்டு வேறு தொழிலில் இருப்பதும் உண்டு. அதையும் நான் பார்க்கின்றேண். மிகவும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், சில அரசியல் தலைவர்களைச் சொல்ல முடியும்.

என்ன காரணம் என்று ஜோதிட ரீதியாகப் பார்க்க வேண்டும். மருத்துவத்திற்கு சூரியன் வலுவாக இருக்க வேண்டும். அரசியலுக்கும் சூரியன் வலுவாக இருக்க வேண்டும். எனவே சூரியன் இரண்டு காரகத்தையும் தந்து, அதில் ஒன்றில் மட்டும் பிரகாசிக்க வைத்தது. கிரகங்கள் மருத்துவத்தைப் படிக்க வைத்தது. ஆனால் மனம் அரசியலைச் செய்ய வைத்தது. இப்பொழுது இரண்டு ஜாதகங்களைப் பார்ப்போம். இரண்டு பேருமே மருத்துவத்தில் உயர்கல்வி படித்து வெளிநாட்டில் இருப்பவர்கள். முதல் ஜாதகம். மிதுன லக்னம்.
லக்கினத்தில் சந்திரன். எனவே லக்னமும் ராசியும் ஒன்றாக அமைந்துவிட்டது. மருத்துவத்திற்கு முதன்மை கிரகம் செவ்வாய். உடம்பு ரத்தம் இவற்றையெல்லாம் செவ்வாய் பிரதிபலிக்கிறது.

அறுவை சிகிச்சை மருத்துவரோ சாதாரண மருத்துவரோ, எப்படி இருந்தாலும், அவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தாக வேண்டும். ஒரு குறிப்பிட்ட துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக பயிற்சி பெறாவிட்டாலும், அறுவை சிகிச்சை செய்து ரத்தத்தைப் பார்க்கும் அனுபவம் (in MBBS) அவர்களுக்கு இருக்கும். எனவே, செவ்வாய் வலுவாக இல்லாவிட்டால், அவர்கள் ரத்தத்தைக் கண்டு பயப்படுவார்கள். ஒரு சிலர் என்னால் மருத்துவப் படிப்பு படிக்க முடியாது என்று சொல்வதற்கும் காரணம் இதுதான். மிதுன லக்கினத்திற்கு 6,11 உடையவர் செவ்வாய். செவ்வாய் இங்கே ஆட்சி பெற்றிருக்கிறார். துல்லியமான பாகைக் கணக்கின் பிரகாரம், சந்திரன் மிதுனத்தின் மூன்று பாகையில் மிருகசீரிஷம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் இருக்கிறார். மிருகசீரிஷம் நட்சத்திரம், செவ்வாய் நட்சத்திரம். சந்திரன், செவ்வாய் சாரம் பெற்று செவ்வாய் வலுவாக ஆட்சி பெற்றிருக்கிறார்.

ஆறாம் இடம் என்பது உத்யோக ஸ்தானம். ஒருவருடைய அடிமைத் தொழிலை அதாவது சேவைத் தொழிலை குறிக்கும் இடம். ஜீவன காரகனாகிய சனி மூன்றாம் பார்வையாக செவ்வாயைப் பார்க்கிறார். பொதுவானது, சனி செவ்வாய் என்றாலே இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட பொறியியல் துறை என்று சொல்வதற்கும் வாய்ப்புண்டு.இதில் என்ன விசேஷம் என்று சொன்னால், இந்த ஜாதகர் மருத்துவத் துறையை முதலில் விரும்பவில்லை. பொறியியல் படித்தால் மிக விரைவாக ஒரு வேலையில் சேர்ந்து வெளிநாட்டில் பணிசெய்து, மருத்துவரைவிட அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம்தான் இருந்தது. ஆனால், சந்திரன் சம்பந்தப்பட்டிருப்பதால், பெற்றோர்களின் விருப்பத்திற்கு இணங்க மருத்துவம் படிக்க வேண்டியதாகிவிட்டது.

மருந்து கிரகமாகிய கேது திருவோண நட்சத்திரத்தில் சந்திர சாரம் பெற்றிருக்கிறார். ஏற்கனவே சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் இணைப்பு இருக்கிறது. இப்பொழுது கேதுவும் இணைகிறார். சூரியன் புண்ணிய ஸ்தானத்தில் மறைமுக பலம் பெற்றிருக்கிறார். காரணம் அவர் வாங்கிய சாரம் சுவாதி. (ராகுவின் சாரம்) ராகு இரண்டாம் இடத்திலிருந்து கேதுவைப் பார்க்கிறார். எனவே சூரியனுக்கும் தொடர்பு வந்து விடுகிறது. ராகுவின் தொடர்பு இருப்பதால் (ராகு நீர் ராசியில் அதுவும் சர ராசியில் இருப்பதால்) இவருடைய பணி வெளிநாட்டில் அமைந்துவிட்டது. அதற்குத் தோதாக எட்டாம் இடத்தில் கேதுவும் இருக்கிறார். பத்தாமிடம் நீர் ராசி. அதை குருவும் உயர்கல்வி ஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்து பார்க்கிறார். பூர்வ புண்ணியாதிபதி மற்றும் 12க்குரிய சுக்கிரனும் பார்க்கிறார்.

ஜீவன காரகனான சனியும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ஜீவனஸ்தானம் ஆகிய 10-ஆம் இடத்தை பார்க்கும் குருவும் சுக்கிரனும், சூரியனின் உத்தர நட்சத்திரத்தில் இருக்கின்றார்கள். வெளிநாட்டு வாழ்க்கையைக் குறிப்பது 12-ஆம் இடம். அந்த 12-ஆம் இடத்தோடு குரு ஒன்பதாம் பார்வையில் தொடர்பு கொள்வதும், 12-ஆம் இடத்துக்குரிய சுக்கிரன் குருவோடு இணைந்து இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இவருக்கு மருத்துவத்துறையைத் தந்து, வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பினையும் தந்தது. இரண்டாவதாக ஜாதகம், இது ஒரு பெண் மருத்துவரின் ஜாதகம். இவருடைய கணவனும் ஒரு மருத்துவர். இருவரும் இப்பொழுது வெளி நாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். ரிஷப லக்னம். லக்கினத்தில் சூரியனும் புதனும். எட்டில் செவ்வாய் அமர்ந்து லக்னாதிபதி சுக்கிரனைப் பார்க்கிறார்.

எனவே சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை. லக்னாதிபதிக்கும் செவ்வாய்க்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது.
12-ஆம் இடத்தில் ராகு (செவ்வாய் வீடு) இருப்பதால், அது சர ராசியாகவும் இருப்பதால், பிறந்த இடத்திலிருந்து மாறி வெளிநாடு சென்று குடி புகுவதைக் குறிக்கிறது. செவ்வாய், ராசி அம்சம் இரண்டிலும் வர்கோத்தம பலம் பெற்றிருக்கின்றார். அதைவிட தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியனின் நட்சத்திர காலில் (உத்திராடம்) அமர்ந்திருக்கிறார். இப்பொழுது சூரியனுக்கும் செவ்வாய்க்கும் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. பத்தாம் இடத்தில் உள்ள குரு, ஒன்பதாம் பார்வையால் கேதுவையும் தொடர்பு கொள்ளுகின்றார். கேது செவ்வாய்க்குரிய சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரனுடைய ராசியில் இருக்கின்றார்.

1. சுக்கிரன் லக்னாதிபதி.
2. செவ்வாய் மருத்துவத்திற்கு முதன்மை கிரகம்.
3. கேது சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தில் சுயசாரம் பெற்று வலிமையோடு இருக்கின்றார்.
கேது என்பது நுண்மையான கிருமிகளைக் குறிப்பது. மறைந்து இருக்கக் கூடிய விஷயங்களை ஆராய்வது. இவர் மருத்துவத் துறையில் நுண்ணுயிர் சோதனை செய்தல், ரத்தத்தை ஆராய்தல் முதலிய துறையில் மருத்துவராக இருக்கின்றார்.

பராசரன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi